Tamil Nadu 10th Standard Tamil Book தேம்பாவணி Solution | Lesson 9.3

பாடம் 9.3. தேம்பாவணி

10ஆம் வகுப்பு தமிழ், அன்பின் மொழி - தேம்பாவணி பாட விடைகள் -2023

அன்பின் மொழி > 9.3. தேம்பாவணி

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும்,

தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.

கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.

இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட து தேம்பாவணி.

இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்.

இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.

தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.

இஸ்மத் சன்னியாசிதூய துறவி வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.

இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.

இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.

I. சொல்லும் பொருளும்

  • சேக்கை – படுக்கை
  • யாக்கை – உடல்
  • பிணித்து – கட்டி
  • வாய்ந்த – பயனுள்ள
  • இளங்கூழ் – இளம்பயிர்
  • தயங்கி – அசைந்து
  • காய்ந்தேன் – வருந்தினேன்
  • கொம்பு – கிளை
  • புழை – துளை
  • கான் – காடு
  • தேம்ப – வாட
  • அசும்பு – நிலம்
  • உய்முறை – வாழும் வழி
  • ஓர்ந்து – நினைத்து
  • கடிந்து – விலக்கி
  • உவமணி – மணமலர்
  • படலை – மாலை
  • துணர் – மலர்கள்

II. இலக்கணக் குறிப்பு

  • காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
  • கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
  • காய்மணி – வினைத்தொகை
  • உய்முறை – வினைத்தொகை
  • செய்முறை – வினைத்தொகை
  • மெய்முறை – வேற்றுமைத்தொகை
  •  கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

III. பகுபத உறுப்பிலக்கணம்

1. அறியேன் = அறி + ய் + ஆ + ஏன்

  • அறி – பகுதி
  • ய் – சந்தி
  • ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று

2. ஒலித்து = ஒலி + த் + த் + உ

  • ஒலி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

IV. பலவுள் தெரிக.

பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………………….. , ………………….. வேண்டினார்.

  1. கருணையன் எலிசபெத்துக்காக
  2. எலிசபெத் தமக்காக
  3. கருணையன் பூக்களுக்காக
  4. எலிசபெத் பூமிக்காக

விடை : கருணையன் எலிசபெத்துக்காக

V. குறு வினா

“காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” – உவமை உணர்த்தும் கருத்து யாது?

உவமை:-

இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்

உவமை உணர்த்தும் கருத்து:-

கருணையாகிய நான் என் தயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகிறேன்.

VI. சிறு வினா

எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

கருணையாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.

அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.

உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக்கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.

காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.

“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”

VII. நெடு வினா

கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

குறிப்புச் சட்டம்
முன்னுரை

வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி

முடிவுரை

முன்னுரை:-

தாயின்  அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.

வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி:-

1. மலர்ப்படுக்கை:-

கருணையனின் தாய் மறைந்து விட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் “பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்படுக்கையைப் பரப்பினேன். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.

2. இளம்பயிர் வாட்டம்:-

என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது, இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர் போல் வாடுகிறது.

3. அம்பு துளைத்த வேதனை:-

தீயையும், நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்தால் எற்படும் புண்ணின் வரியைப் போல் என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில்  அழுது வாடுகிறேன்.

4. தவிப்பு:-

சரிந்த வழக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.

5. உயிர்கள் அழுதல்:-

புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனைதோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிேல அழுவன போல கூச்சலிட்டன.

முடிவுரை:-

வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கிறித்துவிற்கு முன் தோன்றியவர் ____________

விடை : திருமுழுக்கு யோவான்.

2. திருமுழுக்கு யோவானுக்கு தேம்பாவணியில் ____________ என பெயரிடப்பட்டுள்ளது

விடை : கருணையன்

3. கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை ____________

விடை : சூசையப்பர்

4. தேம்பாவணியில் ____________ காண்டங்கள் உள்ளன

விடை : மூன்று

5. ____________ தேம்பாவணி படைக்கப்பட்டது

விடை :  17ஆம் நூற்றாண்டில்

II. குறு வினா

1. தேம்பா + அணி என்பதன் பொருள் யாது?

தேம்பா + அணி என்பதன் பொருள்  “வாடாத மாலை” என்பதாகும்.

2. தேன் + பா + அணி என்பதன் பொருள் யாது?

தேன் + பா + அணி என்பதன் பொருள்  “தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு” என்பதாகும்.

3. தேம்பாவணி யாரை பாட்டுடைத் தலைவனாக கொண்டது?

தேம்பாவணி கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தயான சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டது

4. வீரமாமுனிவர் படைத்த நூல்கள் யாவை?

  • சதுரகராதி
  • தொன்னூல் விளக்கம்
  • சிற்றிலகக்கியங்கள்
  • உரைநடை நூல்கள்
  • பரமார்த்தக் குரு கதைகள்
  • மொழிபெயர்ப்பு நூல்கள்

5. இஸ்த் சன்னியாசி குறிப்பு வரைக

வீரமாமுனிவரின் எளிமையும் துறவையும் கண்டு வியந்த, திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் வழங்கினார்.

இஸ்மத் சன்னியாசி என்பதற்கு தூயதுறவி என்று பொருள்.

இஸ்மத் சன்னியாசி என்பது பாரசீகச் சொல் ஆகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்