Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 8.3 – இரட்சணிய யாத்திரிகம்

பாடம் 8.3. இரட்சணிய யாத்திரிகம்

12ஆம் வகுப்பு தமிழ், இரட்சணிய யாத்திரிகம் பாட விடைகள் 2023

கவிதைப்பேழை > 8.3. இரட்சணிய யாத்திரிகம்

ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (Pilgrims Progress) எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் படைக்கப்பட்டது.இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம்.

இது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.

இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.

இதன் ஆசிரியர் எச்.ஏ. கிருட்டிணனார்.

பிற சமய இலக்கியங்களைப் போலவே கிறித்துவ சமய இலக்கியங்களும் தமிழ் இலக்கிய வளமைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன.

எச்.ஏ. கிருட்டிணனார் போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

இவரைக் கிறித்துவக் கம்பர் என்று போற்றுவர்.

சொல்லும் பொருளும்

  • உன்னலிர் – எண்ணாதீர்கள்
  • பிணித்தமை – கட்டியமை
  • நீச – இழிந்த
  • நேசம் – அன்பு
  • வல்லியதை – உறுதியை
  • ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்
  • பாதகர் – கொடியவர்
  • குழுமி – ஒன்றுகூடி
  • பழிப்புரை – இகழ்ச்சியுரை
  • ஏதமில் – குற்றமில்லாத
  • ஊன்ற – அழுந்த
  • மாற்றம் – சொல்
  • நுவன்றிலர் – கூறவில்லை
  • ஆக்கினை – தண்டனை
  • நிண்ணயம் – உறுதி
  • கூவல் – கிணறு
  • ஒண்ணுமோ – முடியுமோ
  • உததி – கடல்
  • ஒடுக்க – அடக்க.
  • களைந்து – கழற்றி
  • திகழ – விளங்க
  • சேர்த்தினர் – உடுத்தினர்
  • சிரத்து – தலையில்;
  • பெய்தனர் – வைத்து அழுத்தினர்.
  • கைதுறும் – கையில் கொடுத்திருந்த;
  • கண்டகர் – கொடியவர்கள்;
  • வெய்துற – வலிமை மிக
  • வைதனர் – திட்டினர்
  • மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்
  • மேதினி – உலகம்
  • கீண்டு – பிளந்து
  • வாரிதி – கடல்
  • சுவறாதது – வற்றாதது
  • வல்லானை – வலிமை வாய்ந்தவரை
  • நிந்தை – பழி
  • பொல்லாங்கு – கெடுதல், தீமை.

இலக்கணக் குறிப்பு

  • கருந்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
  • வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்
  • உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று
  • ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று
  • சொற்ற, திருந்திய – பெயரெச்சங்கள்
  • பாதகர் – வினையாலணையும் பெயர்
  • ஊன்ற ஊன்ற – அடுக்குத் தொடர்

உறுப்பிலக்கணம்

1. பகைத்த = பகை + த் + த் + அ

  • பகை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

2. கடைந்து = கடை + த் (ந்) + த் + உ

  • கடை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் -இறந்தகால இடைநிலை
  • உ – வினெயச்ச விகுதி

3. பழித்தனர் = பழி + த் + த் + அன் + அர்

  • பழி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • அர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

4. இடிந்து = இடி + த் (ந்) + த் + உ

  • இடி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் -இறந்தகால இடைநிலை
  • உ – வினெயச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. முன்னுடை = முன் + உடை

  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “முன்ன் + உடை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “முன்னுடை” என்றாயிற்று

2. ஏழையென = ஏழை + என

  • “உயிர்வரின்…  இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “ஏழை + ய் + என” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “ஏழையென” என்றாயிற்று.

குறுவினா

இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?

  • இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
  • ‘வானம் இடிந்து விழவில்லையே!
  • ‘கடல்நீர் வற்றிப் போகவில்லையே!
  • உலகம் அழியவில்லையே! எனப் புலம்பினர்.

சிறுவினா

‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்:-

எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் குமாரப் பருவத்தில் சரிதப்படலத்தில இடம் பெற்றுறள்ளது.

பொருள்:-

யூதர்களின் கொடுஞ்செயலில் இருந்து விடுபட முடியாமல் ஓர் ஏழை போல அமைதியாய் இருந்தார் என்பது பொருள்.

விளக்கம்:-

யூதர்கள் இறைமகனை கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்கின்ற போது அவர்கள் வாழும் காலம் முழுவதும் துன்பப்படாமல் வாழ வேண்டும் இரக்கப்பட்டார். அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

நெடுவினா

எச். ஏ. கிருட்டிணனார் ‘கிறித்தவக் கம்பரே’ என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.

தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய ஐரோப்பிய கிறுத்துவ தொண்டர்களைப் போல் தமிழ் கிறுத்துவ தொண்டர்களும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ. கிருட்டிணனார். இவருடைய பெற்றோரும் ஆழந்த தமிழ்ப்புலமை கொண்டவர். தன் தந்தையின் கம்பராமயணத் தொடர் சொற்பொழிவுகள் தான் கிருட்டிணனாரைக் கம்பராமயணம் போலம் தாமும் காப்பியம் எழுத வேண்டும் என்று தூண்டியது.  இக்காப்பியத்தின் இடையே தேவாரம் போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

யூதர்கள் இறைமகனை கயிற்றால் கட்டுப்படுத்த துன்புறுத்தினர். அவர்களிடம் இருந்து விடுபட முடியாலும், எந்த உதவியும் பெற இயலாது ஏழையாய் நின்றார். அர்கள்தனக்கு இழிவான செயல்களைச் செய்கின்ற போது அவர்கள் வாழும் காலம் முழுவதும் துன்பப்படாமல் வாழ வேண்டும் இரக்கப்பட்டார்.

கொடியோர் கூறிய இகழ்ச்சி மொழியானது தீக்கொள்ளியானது, தம் இதயத்தில் அழுத்தியது போல் இருந்தத. தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து கொள்ளாமல் மறுசொல்லும் கூறாமல் அமைதி காத்தார். இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட போந்தியு பிலாத்து முன் நிறுத்தினர். அவருக்குத் தண்டனை பெற்றுத் தரவும் உறுதியாக இருந்தனர்.

இறைமகனார் அணிந்திருந்த வெள்ளாடையைக் கழற்றிவிட்டு, முருக்க மலர் போன்று சிவந்த ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர். துன்பம் தரும் கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை அவருடைய தலையில் வைத்து இரத்தம் பீறிட்டு ஒழுகுமளவு அழுத்தினர். கையிலிருந்த கோலினைப் பிடுங்கி  தலையின் வன்மையாக அடித்து வேதனை செய்தனர் . மேலும், அவருடைய திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து பழித்தனர். இதைக் கண்ட மக்கள்

இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
‘வானம் இடிந்து விழவில்லையே!
‘கடல்நீர் வற்றிப் போகவில்லையே!
இன்னும் உலகம் அழியவில்லையே! – எனப் புலம்பினர்.

பொல்லாத யூதர்கள் இறைமகனை இகழ்ந்து பேசிய சொல்லத் தகாத பழிமொழிகளைக்  கேட்டு இறைமகன், பொறுத்திருந்தார்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • கருந்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
  • வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்
  • உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று
  • ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று
  • சொற்ற, திருந்திய – பெயரெச்சங்கள்
  • பாதகர் – வினையாலணையும் பெயர்
  • ஊன்ற ஊன்ற – அடுக்குத் தொடர்

உறுப்பிலக்கணம்

1. பொல்லாத = பொல் + ல் + ஆ + த் + அ

  • பொல் – பகுதி
  • ல் – சந்தி
  • ஆ – எதிர்மறை இடைநிலை
  • த் – எழுத்துப்பேறு
  • அ – பெயரெச்ச விகுதி

2. நின்றனர் = நில் (ன்) + ற் + அன் +அர்

  • நில் – பகுதி
  • “ல்” “ன்” ஆனது விகாரம்
  • ற் -இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • அர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி

3. ஓர்மின் = ஓர் + மின்

  • ஓர் – பகுதி
  • மின் – பலர்பால் வினைமுற்று விகுதி.

4. உன்னலிர் = உன் + ன் + அல் +அர்

  • உன் – பகுதி
  • ன்- சந்தி
  • அல்  – எதிர்மறை இடைநிலை
  • அர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதி

1. செந்நிற = செம்மை + நிற

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “செம் + நிற” என்றாயிற்று.
  • “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “செந்நிற” என்றாயிற்று

2. நுவன்றிலர்= நுவன்று + இலர்

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடு” என்ற விதிப்படி “நுவன்ற் + இலர்” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நுவன்றிலர்” என்றாயிற்று.

3. பொறுத்திருந்தார் =  பொறுத்து + இருந்தார்

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடு” என்ற விதிப்படி “பொறுத்த் + இருந்தார்” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பொறுத்திருந்தார்” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் ஆங்கில நூலின் தழுவலாக அமைந்த படைப்பு

  1. இரட்சணிய மனோகரம்
  2. மனோன்மணியம்
  3. போற்றித் திருஅகவல்
  4. இரட்சணிய யாத்திரிகம்

விடை : இரட்சணிய யாத்திரிகம்

2. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர்

  1. எச்.ஏ. கிருட்டிணனார்
  2. வீரமாமுனிவர்
  3. வேநாயகம்
  4. ஜி.யு.போப்

விடை : எச்.ஏ. கிருட்டிணனார்

3. இரட்சணிய யாத்திரிகம் என்பது

  1. சிற்றிலக்கியம்
  2. சிறுகாப்பியம்
  3. ஒரு பெரும் உருவகக் காப்பியம்
  4. காப்பியம்

விடை : ஒரு பெரும் உருவகக் காப்பியம்

4. இரட்சணிய யாத்திரிகத்தின் பாடல்கள்

  1. 3756
  2. 3776
  3. 3746
  4. 3766

விடை : 3766

5. இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள்

  1. 5
  2. 4
  3. 3
  4. 2

விடை : 5

6. இரட்சணிய யாத்திரிகத்தின் இரட்சணிய சரித படத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிகால நிகழ்ச்சிகள் அமைந்துள்ள பருவம்

  1. ஆதிபருவம்
  2. நிதான பருவம்
  3. குமார பருவம்
  4. ஆரணிய பருவம்

விடை : குமார பருவம்

7. கிறித்துவக் கம்பர் என்று போற்றப்பட்டவர்

  1. வீரமாமுனிவர்
  2. வேநாயகம்
  3. எச்.ஏ. கிருட்டிணனார்
  4. ஜி.யு.போப்

விடை : எச்.ஏ. கிருட்டிணனார்

8. திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த “நற்போதகம்” என்னும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரகம் தொடராக வெளிவந்த ஆண்டு

  1. 11
  2. 13
  3. 12
  4. 15

விடை : 13

8. இரட்சணிய யாத்திரகம் முதல் பதிப்பாக வெளி வந்த நாள்

  1. 1894 – மே
  2. 1896 – மே
  3. 1898 – மே
  4. 1900 – மே

விடை : 1894 – மே

9. இறைமகன்  இயேசுவை இகழ்ந்து பேசியவர்

அ) பொல்லாத யூதர்கள்ஆ) போர்ச் சேவகர்இ) போந்தியு பிலாத்து
  1. அ, ஆ – சரி
  2. ஆ, இ – சரி
  3. இ, அ – சரி
  4. மூன்றும் சரி

விடை : மூன்றும் சரி

10. இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் …………. ஆளுநரின் முன் கொண்டு போய் நிறுத்தினர்

  1. போந்தியுரான்
  2. போந்தியு பிலாத்து
  3. ஏரோது
  4. அகஸ்டஸ் சீசர்

விடை : போந்தியு பிலாத்து

11. இறைமகன் இயேசுவிற்கு வெள்ளாடையை கழ்ற்றி விட்டு …………. மலர் போன்ற ஓர் சிவந்த அங்கியை அவருக்குப் போர்த்தினர்

  1. காந்தன்
  2. முருக
  3. முல்லை
  4. முளரி

விடை : முருக

குறுவினா

1. இரட்சணிய யாத்திரிகம் குறிப்பு வரைக

  • ஜான்பனியன் எழுதியபில்கிரிமஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூல்
  • எச்.ஏ. கிருட்டிணனார் தமிழில் எழுதினார்.
  • 3766 பாடல்கள்.
  • ஐந்து பருவம் :  ஆதிபருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம்.

2. யூதர்களின் கொடுஞ்செயலுக்கு இறைமகனார் இரங்கிய தன்மை யாது?

இம் மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கபட்டார்.

3. எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் எந்த இதழில எத்தனை ஆண்டு வெளியானது?

  • “நற்போதம்” எனும் ஆன்மிக மாத இதழ்.
  • பதிமூன்று ஆண்டுகள்.
  • முதல் பதிப்பு – 1894 மே திங்கள்

4. நம்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரட்சணிய யாத்திரிகம் எந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது?

நம்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரட்சணிய யாத்திரிகம் குமாரப் பருவத்தில் இரட்சணிய சரித படலத்தில் இடம் பெற்றுள்ளது.

5. “எண்ண மிட்டவர் பொந்தியு பிலாத்தேனும் இறை முன்” இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.

இடம்:-

எச்.ஏ.கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:-

இயேசு பெருமானுக்கு தண்டனை பெற அழைத்துச் செல்லுதல்.

விளக்கம்:-

இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட போந்தியு பிலாத்து முன் நிறுத்தினர். அவருக்குத் தண்டனை பெற்றுத் தரவும் உறுதியாக இருந்தனர்.

6. எச்.ஏ.கிருட்டிணனார் எழுதிய நூல்கள் யாவை?

போற்றித்திருவகல், இரட்சணிய மனோகரம், இரட்சணிய சமய நிர்ணயம்.

7. என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது து என்பார்!
என்கொல் வானம் இடிந்து விழுந்திலது என்பார்! – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.

இடம்:-

எச்.ஏ.கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:-

இறைமகனாரை யூதர்கள் துன்புறுத்தும்போது மக்களின் புலம்பல்

விளக்கம்:-

இறைமகனார் அணிந்திருந்த ஆடையைக் கழற்றி விட்டு, ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர். கூர்மையான முள் முடியை அழுத்தினர். இரத்தம் பீறிட்டதைக் கண்டு இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
‘வானம் இடிந்து விழவில்லையே! ‘கடல்நீர் வற்றிப் போகவில்லையே!
இன்னும் உலகம் அழியவில்லையே! – என்று ஜெருசலேம் மக்கள் புலம்பினர்.

7. பாரி, பேகன் செயல் குறித்தப் பழமொழி நானூறு கூறுவன யாவை?

  • முல்லைக்கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவை அல்ல.
  • ஈகையால் செய்யப்பட்டவையே இது. இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பது. இதையே பழமொழி நானூறு
  • “அறிமடமும் சான்றோர்க்கு அணி” என்று கூறுகிறது.

சிறுவினா

1. எச்.ஏ. கிருட்டிணனார் குறிப்பு வரைக

  • இரட்சணிய யாத்திரிகத்தினை எழுதியவர் எச்.ஏ. கிருட்டிணனார் ஆவர்.
  • இவரது பெற்றோர் சங்கர நாராயணன் – தெய்வநாயகி ஆவர்.
  • இவர் பிறந்த ஊர் திருநெல்வேலி – கரையிருப்பு
  • இரட்சணிய யாத்திரிகத், இரட்சணிய மனோகரம், இரட்சணிய நவநீதம், இரட்சணிய சமய நிர்ணயம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
  • கிறித்துவ கம்பர் என போற்றப்படுகிறார்.

2. இறைமகனாருக்கு யூதர் செய்த கொடுஞ்செயல்கள் யாவை?

  • யூதர்கள் இறைமகனாரைக் கயிற்றால் கட்டினர். ஒன்று கூடி இழுத்தனர்.
  • கொல்வதற்காக ஆளுநர் போந்திய பிலாத்து முன் நிறுத்தினர்.
  • அணிந்திருந்த ஆடையைக் கழற்றி முழுக்க மலர் போன்ற சிவந்த ஆடையப் போர்த்தினர.
  • இறைமகனார் அணிந்திருந்த வெள்ளாடையைக் கழற்றிவிட்டு, முருக்க மலர் போன்று சிவந்த ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர்.
  • துன்பம் தரும் கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை அவருடைய தலையில் வைத்து இரத்தம் பீறிட்டு ஒழுகுமளவு அழுத்தினர்.
  • கையிலிருந்த கோலினைப் பிடுங்கி  தலையின் வன்மையாக அடித்து வேதனை செய்தனர்.
  • அவருடைய திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து பழித்தனர்.

 

சில பயனுள்ள பக்கங்கள்