Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 காடு Solution | Lesson 2.1

பாடம் 2.1 காடு

அணில் நிழல் காடு > 2.1. காடு

கார்த்திகை தீபமெனக்
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடீ – கிளியே
பார்வை குளிருமடீ!

காடு பொருள்கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே – கிளியே
குளிர்ந்த நிழல்கொடுக்கும்

குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனிபறிக்கும்
மரங்கள் வெயில்மறைக்கும் – கிளியே
வழியில் தடையிருக்கும்

பச்சை மயில்நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர வங்கலங்கும் – கிளியே
நரியெலாம் ஊளையிடும்

அதிமது ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை போடுமடீ – கிளியே
பூங்குயில் கூவுமடி!

சிங்கம் புலிகரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடீ – கிளியே
இயற்கை விடுதியிலே!

– சுரதா

நூல்வெளி

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.

இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.

பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை “உவமைக் கவிஞர்” என்றும் அழைப்பர்.

அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இப்பாடல் “தேன்மழை” என்னும் நூலில் “இயற்கை எழில்” என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.

கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

I. சொல்லும் பொருளும்

  1. ஈன்று – பெற்று
  2. களித்திட – மகிழ்ந்திட
  3. கொம்பு – கிளை
  4. நச்சரவம் – விடமுள்ள பாம்பு
  5. அதிமதுரம் – மிகுந்த சுவை
  6. விடுதி – தங்கும் இடம்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வாழை, கன்றை ________.

  1. ஈன்றது
  2. வழங்கியது
  3. கொடுத்தது
  4. தந்தது

விடை : ஈன்றது

2. காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. காடு + டெல்லாம்
  2. காடு + எல்லாம்
  3. கா + டெல்லாம்
  4. கான் + எல்லாம்

விடை : காடு + எல்லாம்

3. கிழங்கு + எடுக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

  1. கிழங்குஎடுக்கும்
  2. கிழங்கெடுக்கும்
  3. கிழங்குடுக்கும்
  4. கிழங்கொடுக்கும்

விடை : கிழங்கெடுக்கும்

III. நயம் அறிக

பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள்

  • கார்த்திகை – காடெல்லாம்
  • பார்த்திட – பார்வை
  • காடு – காய்கனி
  • குரங்கு – குடியிருக்கும்
  • ச்சை – ன்றி
  • சிங்கம் – சிறுத்தை

எதுகைச் சொற்கள்

  • கார்த்திகை – பார்த்திட – பார்வை
  • ளித்திடவே – குளிர்ந்திடவே
  • குங்கு – மங்கள்
  • சிங்கம் – எங்கும்

இயைபுச் சொற்கள்

  • பொருள்கொடுக்கும் – ஈன்றெடுக்கும் – நிழல் கொடுக்கும்
  • குடியிருக்கும் – தடையிருக்கும்

IV. குறுவினா

1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?

காட்டுப்பூக்களுக்கு கார்த்திகை விளக்கை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்

2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

  • காட்டில் உள்ள மலர்களைக் காணும் போது கண்கள் குளிர்ச்சி பெறும்.
  • காடு பலவகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.
  • எல்லோரும் சேர்ந்து மகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
  • காட்டு விலங்குகளுக்கு உணவாக கனி தரும்.

V. சிறுவினா

‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.

  • பன்றிகள் காட்டிலுள்ள கிழங்கை தோண்டி உண்ணும்,
  • நரிக்கூட்டம் ஊளையிடும்.
  • மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்
  • இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இராசகோபாலன் என்ற இயற்பெயர் கவிஞர் _________

விடை : சுரதா

2 உவமைக்கவிஞர் என அழைக்கப்படுபவர் _________

விடை : சுரதா

3. கார்த்திகை விளக்குள் போன்று இருந்தவை _________

விடை : மலர்கள்

4. _________, _________ நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தரும்

விடை : காடும், கடலும்

5. _________ வளமே நாட்டின் வளம்

விடை : காட்டின்

II. பிரித்து எழுதுக

  1. காடெல்லாம் = காடு + எல்லாம்
  2. பூத்திருக்கும் = பூத்து + இருக்கும்
  3. ஈன்றெடுக்கும் = ஈன்று + எடுக்கும்
  4. நரியெலாம் = நரி + எலாம்

II. சிறு வினா

1. கவிஞர் சுரதா பற்றி குறிப்பு எழுதுக

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதாசனின் மீது பற்று கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் காெண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் எனறும் அழைப்பர். அமுதும் தேனும், தேன் மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

2. கிளிக்கண்ணி என்றால் என்ன?

கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

3. ஒரு நாட்டின் வளம் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால் தான் “காட்டின் வளமே நாட்டின் வளம்” என அறிஞர்கள் கூறுகின்றனர்.

4. சுரதா எனப் பெயர் வரக்காரணம் என்ன?

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதாசனின் மீது பற்று கொண்டவர். பாரதிதாசனின இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்காெண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

5. உவமைக் கவிஞர் பெயர்காரணம் கூறுக

உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் எனறும் அழைப்பர்.

6. சுரதாவின் படைப்புகள் யாவை?

  • தேன் மழை
  • துறைமுகம்
  • அமுதும் தேனும்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

II. குறு வினா

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?

கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.

 

சில பயனுள்ள பக்கங்கள்