Tamil Nadu 8th Standard Tamil Book Term 2 தமிழர் இசைக்கருவிகள் Solution | Lesson 2.4

பாடம் 2.4 தமிழர் இசைக்கருவிகள்

மதிப்பீடு

காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை

மக்களின் மனதிற்கு எழுச்சியை தருபவை இசைக்கருவிகள். கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.

காற்றுக் கருவிகள்

காற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொ்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.

குழல்

காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள் துளையிடும். அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும். இதனைக் கேட்டு மகிழ்ந்த நம் முன்னோர் அமைத்துக் கொண்டவையே குழல்கள். இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர். குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும். இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும். மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

கொம்பு

மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர். கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.

சங்கு

இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளில் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.

முடிவுரை

அழிந்து வரும் இவ்வகைக் காற்றுக் இசைக்கருவிகளைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக் கற்று, அதனைப் பயன்படுத்த வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட ஒன்பது சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய கலையாகப் பிறந்தது __________

விடை: இசை

2. இசையை __________ வகையாகப் பிரிப்பர்

விடை: இரு

3. இசைக் கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர்  __________ எனப்பட்டனர்.

விடை: பாணர்

4. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் __________ எனப்படும்.

விடை: தோல்கருவிகள்

5. சிறு உடுக்கையைக் __________ என்பர்

விடை: குடுகுடுப்பை

6. குடமுழாவினை __________ என்றும் அழைப்பர்.

விடை: பஞ்சமகா சப்தம்

7. சங்கு ஓர் __________ 

விடை: இயற்கைக் கருவி

8. தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது __________ ஆகும்.

விடை: முரசு

I. பொருத்துக

1. குடமுழாஅ. பாண்டில்
2. சங்குஆ. சேமங்கலம்
3. சாலராஇ. பாணி
4. சேகண்டிஈ. பணிலம்
5. திமிலைஉ. பஞ்சமகா சப்தம்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 -இ

II. பொருத்துக

1. மண்ணமை முழவுஅ. மதுரைக்காஞ்சி
2. மாக்கண் முரசம்ஆ. மகேந்திரவர்மன்
3. பரிவாதினிஇ. பொருநாராற்றுப்படை
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

III. பொருத்துக

1. பேரியாழ்அ. 14 நரம்புகளை கொண்டது
2. மகரயாழ்ஆ. 21 நரம்புகளை கொண்டது
3. சகோடயாழ்இ. 19 நரம்புகளை கொண்டது
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

IV. சிறுவினை

1. பாணர் எனப்படுபவர் யார்?

இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்

நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள் (புறநானூறு)

2. உடுக்கையின் வேறு பெயர்கள் யாவை?

  • பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர்.
  • சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர்.

3. புல்லாங்குழல் செய்ய பயன்படும் மரங்கள் சிலவற்றை குறிப்பிடுக

மூங்கில் சந்தனம், செங்காலி, கருங்காலி

4. குழல்கள் வேறு பெயர்கள் யாவை?

வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர்.

5. சிலப்பதிகாரம் கூறும் குழல் வகைகள் யாவை?

கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

6. கொம்பு இசைக்கருவியின் வகைகள் யாவை?

ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி

7. திருப்பாவையில் சங்கினை பற்றி குறிப்பிடும் பாடல் எழுதுக

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்

8. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் விணை என்ன?

பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

9. திமிலை என்றால் என்ன?

பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும்.

மணற்கடிகார வடிவத்தில் இக்கருவி அமைந்திருக்கும். இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.

9. திமிலை பற்றிய பெரியபுராணப் பாடலினை எழுதுக

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி

10. காலத்தை அறிவிக்க பயன்படும் முழவுகளை கூறுக

காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

V. குறுவினை

1. இசைக்கருவிகளின் வகைகள் யாவை?

இசைக்கருவிகள் தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும்.

1. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும்.

(எ.கா.) முழவு, முரசு

2. நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும்.

(எ.கா.) யாழ், வீணை

3. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகள் எனப்படும்.

(எ.கா.) குழல், சங்கு

4. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும்.

(எ.கா.) சாலரா, சேகண்டை

2. குடமுழா குறிப்பெழுதுக?

ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது குடமுழா. ஒரு பெரிய குடத்தின் வடிவில் ஐந்து வட்டவடிவ வாய்களுடன் அமைந்திருக்கும். நடுவில் இருக்கும் வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு வாயும் தோலால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும். இதன் காரணமாக இதனைப் பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர். இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும்.

2. சங்கு – குறிப்பு வரைக?

இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப்பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளில் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.

16. சேகண்டி பற்றி குறிப்பு வரைக

வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்தது சேகண்டி. இதனைக் குச்சியாலோ அல்லது இரும்புத் துண்டாலோ அடித்து ஒலி எழுப்புவர்.

இது தேவைக்கு ஏற்பப் பல அளவுகளில் உருவாக்கப்படும். இதனைச் சேமங்கலம் என்றும் அழைப்பர். இதனைக் கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைப்பர்.

14. முரசு என்பது என்ன? அதனை விளக்குக.

தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது முரசு ஆகும்.

படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாக்கண் முரசம் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்