9th Std Science Solution in Tamil | Lesson.24 சூழ்நிலை அறிவியல்

பாடம் 24 சூழ்நிலை அறிவியல்

சூழ்நிலை அறிவியல் வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் ………………… என அழைக்கப்படுகின்றன.

  1. உயிரியல் காரணங்கள்
  2. உயிரற்ற காரணிகள்
  3. உயிர்க் காரணிகள்
  4. இயற் காரணிகள்

விடை:  உயிரற்ற காரணிகள்

2. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை …………………… எனப்படும்.

  1. ஆவியாதல்
  2. குளிர்வித்தல்
  3. பதங்கமாதல்
  4. உட்செலுத்துதல்

விடை:  பதங்கமாதல்

3. வளிமண்டல கார்பன் டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு …………… எனப்படும்.

  1. ஒளிச்சேர்க்கை
  2. உட்கிரகித்தல்
  3. சுவாசித்தல்
  4. சிதைத்தல்

விடை:  ஒளிச்சேர்க்கை

4. ……………….. ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.

  1. கார்பன் மோனாக்சைடு
  2. கந்தக டைஆக்ஸைடு
  3. நைட்ரஜன் டைஆக்ஸைடு
  4. கரியமில வாயு

விடை:  கரியமில வாயு

5. தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக்டீரியாக்கள் நைட்ரஜன் சுழற்சியில் ……………….க்கு காரணமாக உள்ளன.

  1. அமோனியாவாதல்
  2. நிலைப்படுத்துதல்
  3. நைட்ரேட்டாதல்
  4. நைட்ரேட் வெளியேற்றம்

விடை:  நைட்ரேட் வெளியேற்றம்

6. கீழ்க்கண்டவற்றுள் எது நீர்த்தாவரங்களின் தகவமைப்புகளில் இல்லாதது?

  1. நன்றாக வளர்ச்சி அடையாத வேர்கள்
  2. குறுக்கப்பட்ட உடலம்
  3. நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்
  4. மென்மையாக பிளவுற்ற நீரில் மூழ்கிய இலைகள்

விடை:  நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்

7. சில வறண்டநிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ……………………

  1. நீராவிப் போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு
  2. நீரைச் சேமிப்பதற்கு
  3. நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு
  4. இவையனைத்தும்

விடை:  இவையனைத்தும்

8. மண்புழுவின் தகவமைப்புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.

  1. உணர் நீட்சி அல்லது துடுப்புக்களற்ற நீண்ட உடலமைப்பைக் கொண்டது.
  2. மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும் நீட்சிகள் (சீட்டாக்கள்) காணப்படும்.
  3. குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.
  4. சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பகல் நேரத்தில் மண்ணில் பதுங்கிக் கொள்ளும்.

விடை:  குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.

9. கீழ்க்கண்டவற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும்?

  1. நீர் மறுசுழற்சி
  2. ஆழ்துளைக்கிணறுகளை அதிகப்படுத்துதல்
  3. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை பெருமளவில் பயன்படுத்துதல்.
  4. தாவரங்களுக்கு நீர் ஊற்றும்போது குழாய்களைப் பயன்படுத்துதல்.

விடை:  நீர் மறுசுழற்சி

10. கழிவு நீரில் பகுதிப்பொருள்களாகக் காணப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், தொங்கல்கள், திண்மங்கள், கன உலோகங்கள் ஆகியவை நீர் சுத்திகரிப்பின் ………………… நிலையில் நீக்கப்­படுகின்றன.

  1. முதல்
  2. இரண்டாம்
  3. மூன்றாம்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை:  மூன்றாம்

II. பொருத்துக

நுண்ணுயிரிகள்அதன் பங்கு
1. நைட்ரஜன் நிலைப்படுத்துதல்நைட்ரசோமோனாஸ்
2. அமோனியாவாதல்அசோடோபாக்டர்
3. நைட்ரேட்டாதல்சூடோமோனாஸ் சிற்றினங்கள்
4. நைட்ரேட் வெளியேற்றம்அழுகவைக்கும் பாக்டீரியாக்கள்
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

III. சரியா? தவறா?

1. நைட்ரஜன் ஒரு பசுமை வாயு ஆகும்.

விடை: தவறு

 சரியான விடை: கார்பன்-டை-ஆக்ஸைடு ஒரு பசுமை வாயு ஆகும்.

2. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில் காணப்படுகின்றது.

விடை: தவறு

சரியான விடை: நன்றாக வளர்ச்சியடைந்த வேர்த் தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில் காணப்படுகின்றது.

3. பாலூட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும்.

விடை: சரி

4. மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துக்கின்றன.

விடை: தவறு

சரியான விடை: வெளவால்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துக்கின்றன.

5. கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

விடை: தவறு

சரியான விடை: கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது வறண்ட சூழ்நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

IV. சுருக்கமாக விடையளி.

1. உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?

உயிருள்ள காரணிகள்

தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிருள்ள உயிரினங்களை உள்ளடக்கியது.

உயிரற்ற காரணிகள்

வெப்பம், அழுத்தம், நீர், மண் (நிலம்), காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத் திறனையும் பாதிக்கின்றன.

2. நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?

புதை படிவ எரிபொருள்களை (இயற்கை வாயு / பெட்ரோல் டீசல்) எரிப்பதன் மூலமும், நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கின்றது. விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரஜனானது ஆறுகளுக்குச் சென்று அங்கிருந்து கடல் சூழ்நிலையை சென்றடை கிறது. இவ்வாறு கடத்தப்படுவதன் மூலம் உணவு வலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது; வாழிடங்கள் அழிகின்றன; மேலும் உயிரினங்களின் பல்வகைத் தன்மையையும் மாற்றியமைக்கப்படுகின்றன.

3. தகவமைப்பு என்றால் என்ன?

ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம்.

4. நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?

  1. தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்.
  2. நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்.
  3. நீரின் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டிருத்தல்.
  4. நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்.

5. நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?

  1. நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
  2. போதுமான அளவு பயன்படுத்தக்கூடிய நீரானது நமக்குக் கிடைப்பதை உறுதிப்படுகிறது.
  3. நீர் மாசுபடுதலைக் குறைக்க உதவுகின்றது.
  4. ஆற்றல் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு இது உதவி புரிகின்றது

6. உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக்கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.

  • மழை நீர் சேகரிப்பு.
  • மேம்படுத்தப்பட்ட பாசன நுட்பங்கள்.
  • பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் நீர் சேகரித்தல் அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
  • வீடுகளில் நீர் பயன்பாட்டைக் குறைத்தல்.
  • நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • பண்ணைக் குட்டைகளை உருவாக்குதல்.
  • நீரினை மறுசுழற்சி செய்தல்.

7. மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?

மறுசுழற்சி நீரானது கீழ்கண்ட வற்றில் பயன்படுகிறது.

  • விவசாயம்.
  • இயற்கை அழகுமிக்க நிலங்களை உருவாக்குதல்
  • பொதுப்பூங்காக்கள்
  • குழிப்பந்தாட்ட விளையாட்டுத்திடல்.
  • எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆற்றல் நிலையங்களில் உள்ள குளிர்விப்பான்கள்.
  • கழிவறைகளைச் சுத்தம் செய்தல்.
  • தூசிகளைக் கட்டுப்படுத்தல்.
  • கட்டுமானச் செயல்கள்.

8. ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?

ஐ.யூ.சி.என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம்குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருகிறது.

ஐ.யூ.சி.என். நோக்கம்

“இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் கூடிய நேர்மையான உலகம்” என்பதே இதன் நோக்கமாகும்.

9. உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச்சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?

நகரமயமாதல், நெகிழியால் உருவாக்கப்பட்ட தேவையற்ற கழிவுப்பொருள்களை நிலத்தின் மீதும், நீர் நிலைகளின் மீதும் வீசி எறிதல், நீர் நிலைகளை மாசுபடுத்துதல் மற்றும் காடுகளை அழித்தல் ஆகியன நீர் சுழற்சியைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் மனிதனின் முக்கியச் செயல்பாடுகளாகும்.

10. கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்டறி. தங்கள் வாழிடங்களில் எவ்வாறு அவை தாமாகவே தகவமைத்துக் கொள்கின்றன?

வேலம்பாசி

நீரினுள் மூழ்கிய இலைகள் குறுகியதாகவோ அல்லது நுண்ணியதாக பிளவுற்றோ காணப்படும்.

எ.கா. வேலம்பாசி

11. சாம்பல் நீர் என்றால் என்ன?

வீடுகள், வணிக நிவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், துணி துவைப்பதால் வெளியேறும் நீர், குளியலறைகள், வாறல் இரைப்பான்கள் மற்றும் ஆகியவை சாம்பல் நீர் எனப்படுகின்றன

V. விரிவாக விடையளி.

1. நீர்ச் சுழற்சியில் உள்ள செயல்பாடுகளை விவரி.

நீர் சுழற்சி என்பது பூமியின் மீது நீரின் தொடர்ச்சியான இயக்கத்தைக் குறிக்கிறது. இந்நிகழ்வில் நீரானது ஒரு நீர்த்தேக்கத்தில் இருந்து மற்றொரு நீர்த்தேக்கத்திற்குச் சென்றடைகிறது. இவ்வாறு செல்லும்போது இது நீராவியாதல், பதங்கமாதல், நீராவிப்போக்கு, குளிர்விக்கப்படுதல், மழைப்பொழிவாதல், மேற்பரப்பில் வழிந்தோடுதல் மற்றும் தரைகீழ் ஊடுருவுதல் போன்ற பல்வேறு இயற்பியல் மாற்றங்களை அடைகின்றது. இவ்வகை இயற்பியல் நிகழ்வுகளின் போது நீரானது மூன்று நிலைகளில் மாற்றமடைகின்றது.

அவையாவன: திட நிலை (பனிக்கட்டி), திரவ நிலை (நீர்) மற்றும் வாயு நிலை (நீராவி).

9th Science Guide Environmental Science Answers in Tamil Water cycle

ஆவியாதல்:

இங்கு நீரானது கொதிநிலையை அடைவதற்கு முன் வாயுவாக மாற்றப்படுகிறது. பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.

பதங்கமாதல்:

பதங்கமாதல் என்பது திட நிலையில் இருந்து ஒருபொருள் திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும். வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன. நீராவிப்போக்கு: தாரவங்களில் காணப்படும் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் (இலைத்துளை, பட்டைத்துளை முதலியன) மூலம் தாவரங்கள் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு வெளியிடும் நிகழ்வு நீராவிப்போக்கு என அழைக்கப்படுகிறது.

குளிர்வித்தல்:

நீராவியாக உள்ள நீரை வாயுநிலைக்கு மாற்றும் நிகழ்வு குளிர்வித்தல் என்று அழைக்கப்படுகிறது. இது நீராவிப்போக்கிற்கு எதிரான நிகழ்வாகும். உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாகக் காணப்படுவதால், அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகின்றது. இந்த நீர்த்திவலைகள் அருகருகே வரும்பொழுது மேகங்களும், பனிமூட்டங்களும் உருவாகின்றன.

மழைப் பொழிவு:

காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்றுசேர்ந்து பெரிய நீர்த்திவலைகளாக மாறி மழையாகப் பொழிகின்றன. தூறல், மழை, பனி, ஆலங்கட்டி மழை ஆகியன மழைப்பொழிவில் அடங்கும்.

தரைமேல் வழிந்தோடும் நீர்:

மழைப்பொழிவு ஏற்பட்டவுடன் பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது. இந்த நீர் ஒன்றாக இணைந்து, கால்வாய்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி, கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகின்றன.

ஊடுருவல்:

மழை நீரானது வழிந்தோடியவுடன் ஒரு பகுதி நீரானது மண்ணுள் உட்புகுகின்றது. இது, மண்ணிற்குள் ஆழமாகச் சென்று நிலத்தடி நீரை அதிகரிக்கின்றது.

உள் வழிந்தோடல்:

மழை நீரின் மற்றொரு பகுதியானது நுண்ணிய அல்லது உடைந்த பாறைகளின் உள்ளே பாய்ந்து செல்கின்றது.

ஊடுருவல் மற்றும் உள்வழிந்தோடல் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகளாக இருந்தாலும், அவை நீரானது பூமிக்குள் செல்லும் இரு வேறு முறைகளாகும்.

2. வரைபடம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி.

9th Science Guide Environmental Science Answers in Tamil Carbon cycle

3. வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.

1. இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன.

எ.கா. எருக்கு.

2. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.

எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை.

3. மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள்காணப்படும்.

எ.கா. கருவேலமரம்.

சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன.

எ.கா. சப்பாத்திக்கள்ளி.

4. ஒரு சில வறண்ட நிலத்தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும்போதே, குறுகிய கால இடைவெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.

4. வாழிடத்திற்கு ஏற்றாற்போல், வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?

வௌவால்கள் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டிகளாகும். இவை பெரும்பாலும் குகைகளில் வாழ்கின்றன. குகைகள் பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்து அவற்றைப் பாதுகாப்பதோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கின்றன. வௌவால்கள் மரங்களிலும் பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும், பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன. இவை பூச்சிகளை உண்டு அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதாலும், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் உதவி செய்வதாலும் மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. தங்களின் வாழிடத்திற்கேற்ப வௌவால்கள் பெற்றுள்ள தகவமைப்புகளை நாம் இங்கு பார்ப்போம்.

இரவுநேரப் பழக்கம்

வௌவால்கள் இரவுநேரங்களில் அதிக செயல்திறன் மிக்கவைகளாக உள்ளன. இப்பழக்கம் அவற்றிற்கு ஒரு பயனுள்ள தகவமைப்பாகும். ஏனெனில், பகல் நேரங்களில் வௌவாலின் மெல்லிய கருத்த இறக்கைச் சவ்வானது (பெட்டாஜியம்) அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் அவைபறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது. இதனால், அவற்றின் உடலில் அதிகளவு நீர்இழப்பு ஏற்படலாம்.

பறத்தலின் தகவமைப்பு

வௌவால்களின் இறக்கைகள் பூச்சிகள் மற்றும் பறவைகளின் இறக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இவற்றின் முன்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன. இறக்கைகளில் உள்ள எலும்புகள் நீண்ட விரலின் சவ்வுகளோடு சதையில் இருபக்கமும் இணைக்கப்பட்டுக் காணப்படும். இந்த அமைப்பு விரலிடைச் சவ்வு எனப்படும். பறக்கும் போது இயக்கத்தினைக் கட்டுப்படுத்த இதன் வால் உதவுகின்றது. சிறகடித்துப் பறக்க உதவும் வகையில் அவற்றின் சிறகுகளில் உள்ள சதைகள் நன்றாக வளர்ந்தும், அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன. ஓய்வு நேரத்தில் தலைகீழாக தொங்கும்போது இறுகப்பிடித்துக் கொள்ளும் தன்மையை அவற்றின் பின்னங்கால்களின் தசை நார்கள் அவற்றிற்கு
அளிக்கின்றன.

குளிர்கால உறக்கம் (Hibernation)

குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து, செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும். வௌவால்கள் குளிர் இரத்த விலங்குகளானாலும், மற்ற குளிர் இரத்த பாலூட்டிகள் போல் அல்லாமல் ஓய்வுநேரத்தில் அவற்றின் உள்வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன. இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைத் தக்கவைத்துக் கொள்கின்றன.

எதிரொலித்து இடம் கண்டறிதல் (Echolocation)

வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல. ஆனாலும், இரவுநேரங்களில் பறந்து, தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு, பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பைப் பயன்படுத்துகின்றன (மீயொலி அலைகள் ultrasonic sound). இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர். இந்த அலைகள் அவற்றின் இரையின் மீது (prey) பட்டு எதிரொலித்து, மீண்டும் அவற்றின் காதினை வந்தடைகின்றன. இந்த எதிரொலியானது இரையின் இடத்தினைக் கண்டறியப் பயன்படுகிறது.

9th Science Guide Environmental Science Answers in Tamil Bats

5. நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவுநீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?

மழை நீர் சேகரிப்பு தவிர, நீரை மறுசுழற்சி செய்வதும் நீரைப் பாதுகாப்பதற்கான முக்கியமான உத்தியாகும். மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன் தரக்கூடிய நோக்கங்களுக்காக, மீண்டும் பயன்படுத்துவதே நீர் மறுசுழற்சி ஆகும்.

நீர் மறுசுழற்சி நிலைகள்

பழமையான நீர்ச்சுத்திகரிப்பு முறைகள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை உள்ளடக்கியவை ஆகும். இவற்றின் மூலம் திண்மங்கள், கரிமப் பொருள்கள் மற்றும் சத்துக்கள் ஆகியன கழிவு நீரிலிருந்து நீக்கப்படுகின்றன. கழிவு நீர்ச் சுத்திகரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளை உள்ளடக்கியதாகும்.

முதல் நிலை சுத்திகரிப்பு

முதல் நிலை சுத்திகரிப்பு என்பது கழிவுநீரை தற்காலிகமாக தொட்டிகளில் சேர்த்து வைத்தல் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும், எண்ணெய், உயவுப் பொருட்கள் போன்ற மிதக்கும் பொருட்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகின்றன. கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன. மீதி உள்ள நீர்மம் இரண்டாம் நிலை சுத்திகரிப்புக்கு அனுப்பப்படுகின்றது.

இரண்டாம் நிலை சுத்திகரிப்பு

இதன் மூலம் கழிவு நீரில் கரைந்திருக்கும் மக்கும் (உயிரிகளால் சிதைவுறும்) கரிமப் பொருள்கள் நீக்கப்படுகின்றன. இச்செயல் முறை உயிர்வளியின் (02) முன்னிலையில் காற்று நுண்ணுயிரிகளால் நடத்தப்படுகிறது (உயிரியல் ஆக்ஸிஜனேற்றம்). கழிவு நீரிலுள்ள நுண்ணுயிரிகள் வீழ்படிவாதல் முறையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால், உயிரியல் திண்மங்களைப் பிரித்தவுடன் மீதி உள்ள நீரானது மூன்றாம் கட்ட சுத்திகரிப்புத் தொட்டிக்கு திறந்துவிடப்படுகின்றது.

மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட சுத்திகரிப்பு என்பது கடைசி கட்ட கழிவுநீர் சுத்திகரிப்பாகும். நைட்ஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதலை இது உள்ளடக்கியதாகும். இந்நிலையில், கழிவுநீரில் உள்ள நுண்ணிய கூழ்மத்துகள்கள், வேதியியல் முறையில் உறையச் செய்யும் பொருள்களான படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து, வீழ்படிவாக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

VI. காரணம் தருக

1. வேர்கள் அதிக ஆழமாக வளர்ந்து நீர் உள்ள பூமியின் அடுக்குகள் வரை செல்கின்றன. இவ்வகையான தகவமைப்புகளை எவ்வகைத்தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்?

வறண்ட நிலத்தாவரங்கள்

இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களை கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்களை சென்றடைகின்றன.

எ.கா. :- எருக்கலை

காரணம்:- சுற்றுப்புத்திலிருந்து தேவையான அளவு நீரை உறுஞ்சிக் கொள்ளல்

2. நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுவது மண்புழுவின் தகவமைப்பாகக் கருதப்படுகின்றது. ஏன்?

மண்புழுக்கள் கண்டமாகப் பிரிக்கப்ட்ட நீளமான, உருளை போன்ற உடலமைப்புடன் காணப்படுகின்றன. இவ்வமைப்பு இவை மண்ணின் அடியிலுள்ள குறுகிய வளைகளுக்குள் எளிதாக ஊடுருவிச் செல்ல உதவுகின்றன.

3. எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது, வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா?

வெளவால்கள் பார்வையற்ற விலங்குகள் ஆனாலும் இரவு நேரங்களில் பறந்து தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பை பயன்படுத்துகின்றன. இவ்வமைப்புக்கு எதிரொலித்து கண்டறிதல் என்று பெயர் இந்த அலைகள், அவற்றின் இரையின் மீது பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைகின்றன. இந்த எதிரொலியானது இரையின் இடத்தினை கண்டறிய பயன்படுகிறது.

4. பண்ணைக்குட்டை என்ற அணுகுமுறையானது ஒரு நீர்ப் பாதுகாப்பு முறையாகும். எல்லா விவசாயிகளாலும் ஏன் இந்த முறையை அவர்களின் வயல்களில் கட்டமைத்து பயன்படுத்த முடியவில்லை?

தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் குட்டைகளுக்குப் பாய்ந்தோடும் நீரின் அளவை இவை குறைக்கின்றன. விவசாயிகளின் நிலங்களை அதிகளவு ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

பயனுள்ள பக்கங்கள்