Tamil Nadu 9th Standard Tamil Book Term 2 குடும்ப விளக்கு Solution | Lesson 1.2

பாடம் 1.2. குடும்ப விளக்கு

நூல்வெளி

குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது; கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது

குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல் வரை தன்  பணிகளைச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானது இன்றியமையாதது என கூறும் நூல்

பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம்.

இவர் பாரதியின் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.

பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.

இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பெண்மையைப் போற்றும் கவிதை

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

– பாரதி

மங்கைராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மோ….

– கவிமணி

பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது

– பாவேந்தர்

I. சொல்லும் பொருளும்:

  • களர்நிலம் – உவர்நிலம்,
  • நவிலல் – சொல்
  • வையம் – உலகம்
  • மாக்கடல் – பெரிய கடல்
  • இயற்றுக – செய்க
  • மின்னாளை – மின்னலைப் போன்றவளை
  • மின்னாள் – ஒளிரமாட்டாள்
  • தணல் – நெருப்பு
  • தாழி – சமைக்கும் கலன்
  • அணித்து – அருகில்
  • தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத
  • யாண்டும் – எப்பொழுதும்

II. இலக்கணக்குறிப்பு

  • மாக்கடல் – உரிச்சொல்தொடர்
  • ஆக்கல் – தொழில்பெயர்
  • பொன்னே போல் – உவம உருபு
  • மலர்க்கை – உவமைத்தொகை
  • வில்வாள் – உம்மைத்தொகை
  • தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

III. பகுபத உறுப்பிலக்கணம்

1. விளைவது = விளை + வ் +அ + து

  • விளை – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை;
  • அ – சாரியை
  • து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

2. சமைக்கின்றார் = சமை + க் + கின்று + ஆர்

  • சமை – பகுதி
  • க் – சந்தி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

VI. பொருத்தமான விடையைத் தேர்க

1. சிறுபஞ்சமூலம்அ. காப்பிய இலக்கியம்
2. குடும்ப விளக்குஆ. சங்க இலக்கியம்
3. சீவகசிந்தாமணிஇ. அற இலக்கியம்
4. குறுந்தொகைஈ. தற்கால இலக்கியம்.
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

V. குறு வினா

தலைவியன் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

பெண்கல்வி பெறுதலே தலைவயின் பேச்சில் வெளிப்படுகினற் பாடுபொருள் ஆகும்.

VI. சிறு வினா

சமைப்பது தாழ்வா ? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்.

அ) இன்பம் சமைப்பவர் யார்?

உணவைச் சமைப்பவர் இன்பத்தையும் சமைப்பர்

ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

பாவேந்தரின் கூற்றுப் படி சமைப்பது தாழ்வன்று

VII. நெடு வினா

குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல் விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள்.

இன்று கல்வி இல்லா பெண்களின் குழந்தைகளில் பலர் தீய பழக்கங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கல்வி அறிவுள்ள நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.

இன்று கல்வி கற்ற பெண்களின் குழந்தைகளில் பலர் நல்ல பழக்கங்கள் கற்று உயர்ந்து இருக்கின்றனர்.

வானூர்தியைச் ஓட்டல், கடல் மற்றும் உலகினை அளத்தல் ஆகியன ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது என்று அன்று பாரதிதாசன் கூறியுள்ளவை இன்று நனவாகியுள்ளது.

சமைப்பது, வீட்டு வேலை செய்வது பெண்களுக்கு மட்டுமே பொருத்தமற்றது, அவை நமக்கும் உரியது என ஆண்கள் ஏற்றுக் கொள்ளும் எண்ணம் வர வேண்டும். அந்த நன்நாள் காண்போம் என்று பாரதிதாசன் கூறியது இன்று நனவாகிவிட்டது. ஆண்கள் வீட்டு வேலை செய்வதும் இன்று நடக்கின்றது.

வாழ்க்கை என்பது பொருள் மற்றும் வீரத்தால் அமைவதன்று. அடுப்பில் சமைக்கும் பாத்திரத்தில் சுவையை இட்டு, அருகில் இருந்து உள்ள அன்போடு பரிமாறுதலில் தன் வாழ்வு நலம் பெறும். ஆனால் இன்று இவ்வாறு நடப்பதில்லை.

சமைக்கும் பணி பெண்களின் கடமை, அது அவர்க்கே உரியது என்ற தமிழக வழக்கத்தினை இமைப்பொழுதில் (கண்ணிமைக்கும் நேரத்தில்) நீக்க வேண்டும். இன்று ஓரளவு நீங்கிவிட்டது.

கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. கல்வி உடைய பெண்ணுக்கு கூறப்பட்ட உவமை

  1. திருந்திய கழனி
  2. நெல்
  3. மின்னாள்
  4. களர்நிலம்

விடை: திருந்திய கழனி

2. கழனி என்பதன் பொருள்

  1. மண்
  2. வயல்
  3. நிலம்
  4. உவர்நிலம்

விடை: வயல்

3. களர்நிலம் என்பதன் பொருள்

  1. மண்
  2. வயல்
  3. நிலம்
  4. உவர்நிலம்

விடை: உவர்நிலம்

4. குடும்ப விளக்கு நூல் ______ பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது

  1. 4
  2. 5
  3. 6
  4. 7

விடை: 5

5. ______ என்பது பொருள் மற்றும் வீரத்தால் அமைவதன்று

  1. இன்பம்
  2. வாழ்க்கை
  3. துன்பம்
  4. நலம்

விடை: வாழ்க்கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பாவேந்தரின் பிசிராந்தையார் நாடக நூலுக்குச் ________ விருது வழங்கப்பட்டுள்ளது.

விடை : சாகித்திய அகாதெமி

2. கல்வி இல்லாத பெண்கள் _________ போன்றவர்கள்.

விடை : களர்நிலம்

3. குடும்ப விளக்கு _________ ஆகும்.

விடை : மறுமலர்ச்சி இலக்கியம்

4. குடும்ப விளக்கு நூல் _________ பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

விடை : ஐந்து

5. _________ என்பது பொருள் மற்றும் வீர்த்தால் அமைவதன்று.

விடை : வாழ்க்கை

II. குறு வினா

1. மறுமலர்ச்சி இலக்கியங்கள் எதனால் தோன்றியவை?

புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே மறுமலர்ச்சி இலக்கியங்கள்.

2. கல்வியறிவு இல்லாத பெண்களை பற்றி பாவேந்தர் கூறுவதென்ன?

கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள்.

III. சிறு வினா

1. பாரதிதாசனின் படைப்புகள் யாவை?

  • பாண்டியன் பரிசு
  • அழகின் சிரிப்பு
  • இருண்ட வீடு
  • குடும்ப விளக்கு
  • தமிழியக்கம்

2. மறுமலர்ச்சி இலக்கியங்களின் பாடுபொருள்கள் சிலவற்றை கூறு.

  • இயற்கையைப் போற்றுதல்
  • தமிழுணர்ச்சி ஊட்டுதல்
  • பகுத்தறிவு பரப்புதல்
  • பொதுவுடைமை பேசுதல்
  • விடுதலைக்குத் தூண்டுதல்
  • பெண்கல்வி பெறுதல்

குடும்ப விளக்கு – பாடல் வரிகள்

கல்வி இல்லாத பெண்கள்
களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி அங்கே
நல்லறிவு உடைய மக்கள்
விளைவது நவில வோநான்!

வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுது மளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே! இன்று
நானிலம் ஆட வர்கள்
ஆணையால் நலிவு அடைந்து
போனதால் பெண்களுக்கு
விடுதலை போனது அன்றோ!

இந்நாளில் பெண்கட்கு எல்லாம்
ஏற்பட்ட பணியை நன்கு
பொன்னேபோல் ஒருகை யாலும்
விடுதலை பூணும் செய்கை
இன்னொரு மலர்க்கை யாலும்
இயற்றுக! கல்வி இல்லா
மின்னாளை வாழ்வில் என்றும்
மின்னாள் என்றே உரைப்பேன்!

சமைப்பதும் வீட்டு வேலை
சலிப்பின்றிச் செயலும் பெண்கள்
தமக்கே ஆம் என்று கூறல்
சரியில்லை; ஆடவர்கள்
நமக்கும் அப் பணிகள் ஏற்கும்
என்றெண்ணும் நன்னாள் காண்போம் !
சமைப்பது தாழ்வா ? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்!

உணவினை ஆக்கல் மக்கட்கு!
உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு
பணத்தினால் அன்று! வில்வாள்
படையினால் காண்ப தன்று!
தணலினை அடுப்பில் இட்டுத்
தாழியில் சுவையை இட்டே
அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
அன்பிட்ட உணவால் வாழ்வோம்!

சமைப்பது பெண்க ளுக்குத்
தவிர்க்கஒணாக் கடமை என்றும்
சமைத்திடும் தொழிலோ, நல்ல
தாய்மார்க்கே தக்கது என்றும்
தமிழ்த்திரு நாடு தன்னில்
இருக்குமோர் சட்டந் தன்னை
இமைப் போதில் நீக்கவேண்டில்
பெண்கல்வி வேண்டும் யாண்டும்!

 

சில பயனுள்ள பக்கங்கள்