Tamil Nadu 9th Standard Tamil Book Term 2 சிறுபஞ்சமூலம் Solution | Lesson 1.3

பாடம் 1.3. சிறுபஞ்சமூலம்

பாடல் வரிகள்

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு

நூல்வெளி

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.

சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.

அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.

இவ்வேர்களினால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குவது போல சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.

சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.

இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்

இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.

காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.

மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

சாதனைக்கு வயது தடையல்ல

10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.

11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.

15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.

16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்.

17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ

நூல்களும் கருத்துகளும்

ஒரு பாடலில் மூன்று கருத்துகளை கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்

  • திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி)

ஒரு பாடலில் ஐந்து கருத்துகளை கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்

  • சிறுபஞ்மூலம் (கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி)

ஒரு பாடலில் ஆறு கருத்துகளை கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்

  • ஏலாதி (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், இலவங்கம், நாககேசரம்)

I. சொல்லும் பொருளும்

  • மூவாது – முதுமை அடையாமல்
  • நாறுவ – முளைப்ப
  • தாவா – கெடாதிருத்தல்

II. இலக்கணக் குறிப்பு

  • அறிவார் – வினையாலணையும் பெயர்
  • வல்லார்– வினையாலணையும் பெயர்
  • விதையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  • உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  • தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

III. பகுபத உறுப்பிலக்கணம்

1. உரையாமை = உரை + ய் + ஆ + மை

  • உரை – பகுதி
  • ய் – சந்தி (உடம்படுமெய்)
  • ஆ – எதிர்மறை இடைநிலை
  • மை – தொழிற்பெயர் விகுதி

2. காய்க்கும் = காய் + க் + க் + உம்

  • காய் – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – பெயரெச்ச விகுதி

IV. பலவுள் தெரிக.

பூவாது காய்க்கும், மலர்க்கைஅடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

  1. பெயரெச்சம், உவமைத்தொகை
  2. எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
  3. வினையெச்சம், உவமை
  4. எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

விடை : எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

V. குறு வினா

மூவாது மூத்தவர், நூல் வல்லார் – இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.

VI. சிறு வினா

விதைக்காமலே முளைக்கும் விதைகள் – இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துக்களை விளக்குக.

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.

பாத்தி அமைத்து விதை விதைக்காமலேமுளைக்கும் விதைகளைப் போல அறிவுநுட்பம் மிகுந்தவர் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.

கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. காரியாசான் எழுதிய நூல்

  1. திரிகடுகம்
  2. சிறுபஞ்சமூலம்
  3. ஏலாதி
  4. திருக்குறள்

விடை: சிறுபஞ்சமூலம்

2. சிறுபஞ்சமூலம் என்பதில் மூலம் என்பதன் பொருள்

  1. ஐந்து
  2. சிறிய
  3. வறுமை
  4. வேர்

விடை: வேர்

3. பூக்காமலே காய்க்கும் மரங்கள் உவமையாகக் கூறப்பட்டது

  1. மூத்தார்
  2. மேதை
  3. மூவாது மூத்தவர்
  4. இளையோர்

விடை: மூவாது மூத்தவர்

4. விதை விதைக்காமல் முளைக்கும் விதைகள் உவமையாகக் கூறப்பட்டது

  1. மூத்தார்
  2. மேதை
  3. இளையோர்
  4. மூவாது மூத்தவர்

விடை: மேதை

5. 11 வயதில் கவிதை எழுதி பாரதி பட்டம் பெற்றவர் _______

  1. பாரதியார்
  2. வள்ளலார்
  3. கலீலியோ
  4. அலெக்ஸசாண்டன்

விடை: பாரதியார்

6. 10 வயதில் சொற்பொழிவாற்றியவர் _______

  1. வள்ளலார்
  2. பாரதியார்
  3. கலீலியோ
  4. அலெக்ஸசாண்டன்

விடை: வள்ளலார்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனித வாழ்வைச் செழுமையாக்குபவை _________

விடை : அறப்பண்புகளே.

2. _________ சில நேரங்களில் தொடர்பு இருப்பதில்லை.

விடை : வயதுக்கும், அறிவுக்கும்

3. _________ வயது ஒரு தடையில்லை.

விடை : சாதனைக்கு

4. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று _________.

விடை : சிறுபஞ்சமூலம்.

5. ஐந்து சிறிய வேர்களால் ஆன மருந்து _________ போக்குகின்றது.

விடை : உடலின் நோயைப்

II. குறு வினா

1. பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளவை எவை?

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவையே பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

2. சிறுபஞ்சமூலம் என்பதற்கு பொருள் யாது?

சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.

3. ஐந்து சிறிய வேர்கள் எவை?

  • கண்டங்கத்திரி
  • சிறுவழுதுணை
  • சிறுமல்லி
  • பெருமல்லி
  • நெருஞ்சி

III. சிறு வினா

1. காரியாசான் – குறிப்பு வரைக

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்

இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.

காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.

மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்